“மாபியாக்களுடன் டீல் வைத்திருந்தால் என்னை புகழ்ந்திருப்பார்கள்” – வைரலாகும் வடக்கு ஆளுநரின் உரை
“மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள். ”
இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும்.
நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலகத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்று (28.04.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்:
” உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல.
மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன.
அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள்.
மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அமைச்சர் சந்திரசேகர் அல்லது பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து அவர்களுக்கு வேலைகளை வழங்குமாறு கோரியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை. சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமன அனுமதிகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் விசேட முயற்சியால் பெற்றுத் தரப்பட்டன.
அத்துடன், இந்தச் செயன்முறையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். அவர்களை நாம் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது.
எனினும், நேர்மையாகச் செயற்படுவர்களுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கபலமாக இருக்கும்.
கடந்த காலங்களில் நியமனங்கள் இலங்கை முழுவதற்குமாக வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வடக்கு மாகாணத்துக்குள்ளேயே உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

எனவே, நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும், என்றார்.





