2029 இல் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர்: சர்ச்சையைக் கிளப்பும் தேரர்
“2029 ஜனாதிபதித் தேர்தலில் நான் பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது எனக்கும் அநுரவுக்கும் இடையில்தான் போட்டி நிலவக்கூடும்” என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாகச் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனவே, 2029 ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் மற்றும் பத்தரமுல்ல சீலரத்ன ஆகியோரே எஞ்சியிருக்கக் கூடும்.
அதாவது, களத்தில் தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறவே ஜனாதிபதி முற்படுகின்றார்” என்று உதய கம்மன்பில கூறியுள்ளாரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தேரர் மேலும் கூறுகையில், “சிலவேளைகளில் அவ்வாறு நடக்கலாம். நானும் அநுரகுமாரவும் குமார் குணரத்னமும் போட்டியிடும் நிலை வரலாம். என்னை மக்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பொது வேட்பாளராகக் கூட நிறுத்தலாம். 2029 இல் ஒன்று நான் ஜனாதிபதியாவேன், இல்லையேல் அவர்கள் ஜனாதிபதியாவார்கள். அதை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று தெரிவித்தார்.




