கோட்டாவின் ரிட் மனு தொடர்பில் நாளை விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளைய (18) தினம் விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு இன்று விசாரிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உண்மைகளை உறுதி செய்வதற்காக இந்த மனுவை நாளை விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ரொஹந்த அபேசூரிய மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.





