ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக halil al-Hayya நியமனம்
இஸ்ரேலிய ராணுவத்தால் கடந்த 2024 அக்டோபர் மாதம் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் (Yahya Sinwar) பதிலாக, ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும், அதன் தலைமைச் சபையின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்த அல்-ஹய்யா, தேர்தலில் (run-off ballot) வெற்றி பெற்றுத் தலைவராகத் தேர்வாகியுள்ளார் என்று ஹமாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களான சின்வார், காசாவின் ராணுவத் தளபதி முகமது தெய்ஃப் மற்றும் அதே ஆண்டில் தெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் மறைவுக்குப் பிறகு அல்-ஹய்யாவின் முக்கியத்துவம் அதிகரித்தது.
அந்த இழப்புகளுக்குப் பிறகு, ஹமாஸின் தலைமைச் சபையை வழிநடத்தும் ஐந்து தலைவர்களில் ஒருவராக அல்-ஹய்யா மாறினார். இந்தத் தலைமைச் சபை என்பது போர்க் காலத்தில் அமைப்பை வழிநடத்துவதற்காக 2024-இன் இறுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக ஐந்து உறுப்பினர் நிர்வாகக் குழுவாகும்.
1960-ஆம் ஆண்டு காசா பகுதியில் பிறந்த அல்-ஹய்யா, 1987-இல் ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அதில் அங்கம் வகித்து வருகிறார். முக்கியமாக கத்தாரை மையமாகக் கொண்டு செயல்பட்ட அவர், இஸ்ரேல், எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் ராஜதந்திர ரீதியாக முக்கியப் பங்கு வகித்தார்.
காசாவிற்கு வெளியே செயல்பட்டது, இஸ்ரேலின் தடைகள் இன்றி அண்டை நாடுகளுக்குப் பயணம் செய்யவும் ஒருங்கிணைக்கவும் அவருக்கு உதவியாக இருந்தது. மேலும், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இஸ்ரேலுடன் நடைபெற்ற மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் தூதுக்குழுக்களை அல்-ஹய்யாவே வழிநடத்தினார்.
இஸ்ரேலியத் தாக்குதல்களால் அல்-ஹய்யாவின் குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2014 போரின் போது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவரது மூத்த மகன் ஒசாமா, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், கடந்த ஆண்டு செப்டம்பரில் கத்தாரின் தோஹாவில் உள்ள குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது மற்றொரு மகன் ஹுமாம் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.





