எரிவாயு விலை உயர்வு – மே 07 இல் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த விலையை விட தற்போது சிலிண்டர் விலை இரட்டிப்பு அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு உணவகங்கள், தேநீர் கடைகள், தெருவோர வியாபாரிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
அதேபோன்று, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே துறையில் ஆண்டுதோறும் பணியிடங்களை குறைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு மட்டும் 29 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் மட்டும் சுமார் 1,900 பணியிடங்கள் குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய மத்திய அரசு, தற்போது உள்ள வேலைகளையே குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
எனவே, எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவும், ரயில்வே பணியிட வெட்டுகளை கைவிடவும் வலியுறுத்தி, மே 7 ஆம் திகதி மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





