ஜப்பானில் தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ!
ஜப்பானின் இவாத்தே மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து நான்காவது நாளாக பற்றி எரிகிறது. இதன் காரணமாக 3000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீயால் , ஓட்சுச்சியின் (Otsuchi) இரண்டு மாவட்டங்களில் 730 ஹெக்டேயர் (1,800 ஏக்கர்) பரப்பளவு எரிந்து சாம்பலாகியுள்ளது.
1,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், ஜப்பான் தற்காப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தீயணைப்பு பணிகளில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குடியிருப்பு உட்பட 08 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பருவகால வறண்ட வானிலை மற்றும் காய்ந்து உதிர்ந்த இலைகளே இந்தத் தீக்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், காலநிலை மாற்றம் காட்டுத்தீக்கு உகந்த சூழ்நிலைகளைத் தீவிரப்படுத்துகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.





