இலங்கை செய்தி

கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்

மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் குறைப்பு மற்றும் ஆண்டின் முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக வெப்ப மின் உற்பத்தி அதிகரித்தமை போன்றவற்றால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, மின்சார சபையின் நிதிச் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 2025 ஜூன் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது நட்டத்தை ஈடுசெய்யப் போதுமானதாக அமையவில்லை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, 2024 இறுதியில் 174.3 பில்லியன் ரூபாவாக இருந்த மின்சார சபையின் குறுகிய காலக் கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2025 இறுதியில் 206.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புகள் 409 பில்லியனிலிருந்து 411.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, மின்சார விநியோகச் செலவு மற்றும் வருமான முன்கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 10.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் மின்சாரத்திற்கான கேள்வியும் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய அனைத்து நுகர்வோர் பிரிவுகளிலும் மின்சார விற்பனை ஒட்டுமொத்தமாக 5.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பாக வீட்டுப் பாவனையாளர் பிரிவில் இரண்டாம் காலாண்டிலிருந்து வலுவான வளர்ச்சி காணப்பட்ட போதிலும், ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக மின்சாரக் கேள்வி தற்காலிகமாகக் குறைந்திருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!