சோகத்தில் முடிந்த விமானப் பயணம் : 11 பயணிகள் பலி!
11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று மிசூரியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை நேரத்தில் ஸ்கைடைவிங் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பட்லர் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் ஒன்று கீழே விழுந்து எரிவதாக அவசரகால மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது.
விபத்து நடந்த இடத்தில், பட்லர் காவல் துறை மற்றும் பேட்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு உதவி செய்து வருவதாக மிசூரி மாநில நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவற்றின் குழுக்கள், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




