இறுதிப்போட்டி நாளை: இலங்கை, இந்தியா மோதல்
பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான இலங்கை அணி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி மீண்டும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (13) ஞாயிறுக்கிழமை நடைபெறவுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 7 ஓவர்களுக்குள் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளானது.
அப்போது ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டம் இலங்கை அணியை மீட்டெடுத்தது. 5-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, அணியை வெற்றிப் பாதைக்கு அருகில் கொண்டு வந்தது.
இருப்பினும், போட்டியின் 17-வது ஓவரில் இந்த இருவரையும் ஆட்டமிழக்கச் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, மீண்டும் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
இதனால் இலங்கை அணி 109 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
ஆனால், பதற்றமின்றி ஆடிய நிலக்ஷிகா சில்வா மற்றும் கௌஷானி நுத்யங்கனா ஜோடி, 8 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றியை உறுதி செய்தது. 18.4 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.




