வடகிழக்கில் தேர்தலை நடத்துவதில் இந்தியா தீவிரம்: விமலின் கட்சி குற்றச்சாட்டு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இலங்கை அந்நாடுகளின் காலனியாக மாற்றப்பட்டு வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்பச் செயல்படும் அரசாங்கமே இங்கு ஆட்சியில் உள்ளது.
இதன் காரணமாகவே, இலங்கையுடன் எப்படியாவது ‘எட்கா’ (ETCA) ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதற்கு இந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியாவில் வேலைவாய்ப்பற்றவர்கள் இங்கு வியாபாரம் செய்யத் தொடங்குவர்.
இதனால் இலங்கைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அடுத்தபடியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது.
முதலமைச்சருக்கு விருப்பமான ஆளுநர் ஒருவரை நியமித்துக் கொண்டால், அங்கு தங்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொள்ள முடியும் என்பதே அவர்களின் திட்டமாகும்” என அவர் குறிப்பிட்டார்.




