மொட்டு கட்சியின் மேடையேறுவது ஏன்? அர்ச்சுனா விளக்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) மேடையில் ஏறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“நாமல் ராஜபக்சவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையக்கூடும். ஆனால், அவர் 14 நாட்களில் வெளியே வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
அநுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் நான் பங்கேற்கவுள்ளேன். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எமது வடக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு எனக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்காகக் குரல்கொடுக்க சஜித் பிரேமதாச அல்லது ரணில் விக்கிரமசிங்க அழைத்தாலும்கூட நான் பங்கேற்பேன். எனது கரங்களில் இரத்தக் கறையோ அல்லது கள்வர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையோ எனக்கு இல்லை” என்று அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.




