சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.
இந்தக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது.
சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும் போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சர்காரியா கமிஷன் அறிக்கை, மிசா விவகாரம் பற்றிய முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியபோது திமுகவினர் ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை.
மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதல்வர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தியே. அதேபோல் சர்க்காரியா கமிஷன் பற்ற்றியும் பலமுறை சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் திமுகவினர் எனது அனுமதியின்றி பதாகைகளைக் காட்டியது ஏன்?. நேற்று முதல்வர் விஜய் பேசிய எதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை.” என்றார்.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், “சட்டப்பேரவையில் இரண்டு நாட்களாக அமளியில் ஈடுபடும் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர், “திமுக கொறடா சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்குகிறேன். அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்” என்றார்.
ஆனால், திமுகவினர் தொடர்ந்து அவையில் அமர்ந்து கோஷமிட்டனர். எனவே, அவையிலிருந்து திமுகவினரை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுகவினரை வெளியேற்றினர்.




