கச்சத்தீவை மீட்குமாறு தேமுதிக வலியுறுத்து
மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு வெளியே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிடுகையில் இது தொடர்பில் கூறியவை வருமாறு ,
” மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்டெடுப்பது ஒன்றே வழி.
கடலில் ரசாயனம் மற்றும் எண்ணெய் கலப்பதைத் தடுத்து, மீன் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
மீன்பிடித் தடைக்காலம் மற்றும் புயல் காலங்களில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும்.
மீனவப் பெண்களுக்குச் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாற்று வருமானத்துக்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். ஆவின் பால் பதப்படுத்தும் குளிரூட்டும் நிலையத்தை வேப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்க வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




