பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை, வியட்நாம் ஆராய்வு!
வியட்நாம் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான General Phan Van Giang இற்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் நேற்று உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், வியட்நாம் அரசாங்கத்திற்கும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழுவிற்கும் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
வியட்நாம் துணைப் பிரதமர், பரஸ்பர நலன்களை மையமாகக் கொண்டு இலங்கையின் பாதுகாப்புத் துறையுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதற்கான வியட்நாமின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், பாதுகாப்பான மற்றும் ஒத்துழைப்பான எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட நோக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வியட்நாம் பிரதிநிதிகள் குழுவில், Lt. Gen. Tran Cong Chinh (GDDI பணிப்பாளர் நாயகம்), Lt. Gen. Vu Thanh Van (வெளிநாட்டு உறவுகள் துறை பணிப்பாளர் நாயகம்), மற்றும் இந்தியாவிற்கான வியட்நாம் பாதுகாப்பு இணைப்பதிகாரி Sr. Col. Nguyen Ngoc Dai ஆகிய உயரதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட மேலதிக செயலாளர், இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.




