சூழ்ச்சிகள் அம்பலம்: விசாரணை வேட்டை தீவிரம்
குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“குற்ற ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பவே இவர்கள் (முன்னாள் ஆட்சியாளர்கள்) சூழ்ச்சி செய்துள்ளனர். போதைப்பொருள் குற்றவாளிகளை விடுவிப்பதற்காக கோடி கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இதுதான் இவர்கள் கட்டியெழுப்பிய அரசியல் கலாச்சாரம்.
குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாக தொடங்கியுள்ளன. இவற்றை மூடிமறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு, நாட்டின் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். இதற்காகவே மக்கள் எமக்கு ஆணை வழங்கினர்.”- என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.




