22 தொடர்பான விசாரணை நிறைவு: அடுத்து என்ன?
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று நிறைவு செய்துள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் 50 இற்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக 22 இற்கு எதிராகவே அதிக மனுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்றும், இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான தீர்மானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (02) தெரிவித்துள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்துவார்.
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை ஈராண்டுகளுக்கு நீடிப்பதை பிரதான விடயமாகக்கொண்டே 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என எதிரணிகள் வலியுறுத்திவருகின்றன.




