இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் சீனத் தூதுவர்
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, எதிர்வரும் 31-ஆம் திகதி நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில், தூதுவர் கீ சென்ஹொங் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆற்றிய பங்களிப்பிற்காக எதிர்க்கட்சித் தலைவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையைத் தொடர்ந்து பேணுவதன் அவசியத்தையும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.





