செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா (photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.
பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னர், சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் தேரில் எழுந்தருளி, ஆலய வீதியுலா வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த இரதோற்சவத்தில் இலங்கையின் பல பகுதிகளிலுமிருந்து வருகை தந்திருந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா முழக்கத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.
தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள கடல் தீர்த்தோற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







