புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப ஒப்பந்தம்
ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸுக்கே திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில், பிரித்தானியாவின் சீர்த்திருத்த கட்சி மற்றும் பிரான்சின் தேசிய பேரணிக் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் போராடி வருகின்றன. இதனை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து நகரமான பர்மிங்காமில் நடைபெற்ற சீர்திருத்தக் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பேசிய பர்டெல்லா Bardella , தேசிய பேரணி அரசாங்கம் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும், புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் எனக் கூறினார்.
“நான் உங்களுக்கு இந்த வாக்குறுதியை அளிக்கிறேன், பிரெஞ்சு மக்கள் (எங்களுக்கு ஜனாதிபதி பதவியை) வழங்கினால், பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்றத்திற்கான நுழைவாயிலாக பிரான்ஸ் இனி இருக்காது என்பதை உறுதிப்படுத்த எங்கள் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்,” என்று கூறினார்.
இதன்பின் ஃபராஜும் பர்டெல்லாவும் பின்னர் ஒன்றாக மேடையில் தோன்றி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின்படி, பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், பிரான்ஸ் அவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.




