3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதே இதுவரை உலக சாதனையாகக் கருதப்பட்டது.

எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட இச்சத்திர சிகிச்சையின் போது, 3.100 கிலோகிராம் (3 கிலோ 100 கிராம்) எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபருக்கே இச்சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இச்சத்திர சிகிச்சையில், வைத்தியர்களான எம்.எம். ரிஷ்லி, ஜே.எம். இஹ்ஸான், சீ. பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் அமில ஜெயக்கடு உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
(அப்துல்சலாம் யாசீம்)




