11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை நேற்று மாலை எடுத்துத் தின்ற சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக அவரைக் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




