1,300 க்கும் அதிகமானோர் பலி – நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கில் உயிரிழந்த 1,300-க்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாடு தழுவிய அளவில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 13 நாட்கள் நிறைவடையும் நிலையில், நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேபாள அரசாங்க அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்து பாரம்பரிய முறைப்படி, துக்க காலத்தின் இறுதி நாளான 13-ஆம் நாளில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் தங்கியிருக்க, உறவினர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.
இந்த இறுதி நாளில் உயிரிழந்தவர்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், வளங்கள் குறைவாக உள்ளதாலும், அரசாங்கம் சார்பில் விரிவான நிகழ்ச்சிகள் எவையும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அரசாங்க நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை” என தேசிய அவசரகால செயல்பாட்டு மையத்தின் (NEOC) அதிகாரி ஃபணீந்திர பௌடெல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை குறைந்தது 1,380 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
சமீபத்திய நாட்களில், நீர்மின் திட்ட சுரங்கம் ஒன்றில் இருந்து சீன நாட்டவர் ஒருவர் உட்பட நான்கு பேரை மீட்புக் குழுவினர் உயிரோடு மீட்டுள்ளனர். வெள்ள வெள்ளத்தில் புதையுண்ட வீட்டிலிருந்து பெண் ஒருவரும் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.
அரசாங்கத் தலைவரான ஜனாதிபதி ராமச்சந்திர பௌடெல், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு சேத விபரங்களை ஆய்வு செய்து வருகின்றார்.
காணாமல் போனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
இதனிடையே, காத்மண்டுவில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் முக்கிய அமைச்சகங்களின் முன்பாக ஒன்றுகூடிய குடும்பத்தினர், நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்ட நூற்றுக்கணக்கானோரைக் கண்டறியும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிசூலி நீர்மின் திட்ட அலுவலகக் கட்டிடம் இடிபாடுகளுக்குள் புதையுண்டதில், அங்கு பணியாற்றிய தனது 55 வயது கணவர் குறித்து 13 நாட்களாக எந்தத் தகவலும் இல்லை என சுமனா சிரேஷ்டா எனும் பெண் கவலையுடன் தெரிவித்தார்.
மற்றொரு போராட்டக்காரரான மகேஷ் பிரசாத் சிரேஷ்டா தெரிவிக்கையில், “அனர்த்தம் நடந்து 6 அல்லது 7 நாட்களுக்குப் பிறகே ஒரு சிறிய அகழ்வாராய்ச்சி இயந்திரம் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டது.
சீனா அல்லது இந்தியாவிலிருந்து பெரிய ரக ஹெலிகாப்டர்களை வரவழைத்து கனரக உபகரணங்களை மீட்புப் பணிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்” எனக் குற்றம்சாட்டினார்.
பாதிக்கப்பட்ட 12 நீர்மின் திட்டப் பகுதிகளில் சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதுடன், 500 பேர் வரை பல்வேறு சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா, சீனா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விசேட மீட்புக் குழுவினர் இடிபாடுகள் மற்றும் சுரங்கங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




