நிதி நெருக்கடி: ஐ.நா. அகதிகள் முகமையின் பட்ஜட் 16 சதவீதம் குறைப்பு
உலகளவில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் நிதி நெருக்கடிக்கு ஏற்ப ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR) தனது வரவுசெலவுத் திட்டத்தில் 16 சதவீதம் குறைத்துள்ளது.
அத்துடன், தனது அதிகாரப்பூர்வ பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 3,500 பேரை நீக்கியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் மற்றும் பிற நாடுகளின் வெளிநாட்டு உதவி நிதி குறைத்ததன் தாக்கத்தால், 2025-ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் முகமையின் பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாகவும், வரவுசெலவுத் திட்டம் மூன்றில் ஒரு பங்காகவும் குறைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் 16,126 ஆக இருந்த பணியாளர்கள் நடப்பு ஆண்டில் 12,051 ஆகவும், 2027-ஆம் ஆண்டில் 8,540 ஆகவும் குறையும் என்று தெரியவருகின்றது.
இருப்பினும், கடந்த காலங்களில் தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களில் பல பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், நடைமுறையில் இந்த அளவுக்குப் பெரியளவில் பணியாளர்கள் குறைப்பு இருக்காது என்று ஐ.நா. அகதிகள் முகமையின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நிதி நெருக்கடி உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர், 2025-ஆம் ஆண்டிலேயே முகமை கடுமையான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து, பணியாளர்களைக் குறைத்ததாகக் கூறினார்.
அத்துடன், முகமையை மேலும் திறம்படவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட ஐ.நா. அகதிகள் முகமை , பெரும்பான்மையாக நாடுகளின் தன்னார்வ நிதியுதவியையே நம்பியுள்ளது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே அகதிகளுக்கான உதவிகளைக் குறைத்துள்ள முகமை, தென்னாப்பிரிக்க அலுவலகத்தை மூடியுள்ளதுடன், செலவைக் குறைக்க ஜெனீவாவிலுள்ள தலைமையகத்தை மலிவான கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
2027-ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வரவுசெலவுத் திட்டம் $7.14 பில்லியனாகும். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் குறைவு என்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
2025-ஆம் ஆண்டில் முகமைக்கு $800 மில்லியனுக்கும் அதிகமாக நிதியளித்த அமெரிக்கா, நடப்பு ஆண்டில் தனது பங்களிப்பை $110 மில்லியனாகக் குறைத்துள்ளது.
சூடான், உக்ரைன் போன்ற போர்களால் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2027-இல் 13.12 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் மேற்கொள்ளப்படும் இந்த நிதிக்குறைப்பு, உகாண்டா, பங்காளதேஷ் போன்ற அகதிகளை அதிகளவில் ஏற்கும் நாடுகளைப் பெரிதும் பாதிக்கும் என உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.




