CNN உள்ளிட்ட 3 ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை
சி.என்.என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடித் தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட டிரம்ப்,
குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றி “தொடர்ச்சியாக பொய்களையும் புனைவுகளையும் எழுதி அல்லது செய்தி வெளியிட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர் வழங்கவில்லை.
பின்னர் இதுவொரு “மிகவும் எளிமையான தடை” என்று குறிப்பிட்ட டிரம்ப், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விளக்கவில்லை. அந்த ஊடகங்களின் ஊழியர்கள் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவுபடவில்லை.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள சி.என்.என் நிறுவனம், இது அமெரிக்க ஊடக சுதந்திரத்தின் மீதான “சட்டவிரோதத் தாக்குதல்” என சாடியுள்ளது. டிரம்பின் இந்தத் தடை அறிவிப்பு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே, பொலிட்டிகோ மற்றும் சி.என்.என் ஆகிய இரு ஊடகங்களின் செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை வளாகத்தில் காணப்பட்டனர்.
அத்துடன், சி.என்.என் செய்திக்குழு ஒன்று துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் ஐயோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தது.
இது தொடர்பாக சி.என்.என் வெளியிட்ட அறிக்கையில், சாத்தியமான இந்தத் தடையானது சட்டவிரோதமானது என்றும், தமது வெள்ளை மாளிகை குழுவினரின் நியாயமான மற்றும் துல்லியமான செய்தி அறிக்கையிடலுக்கு நிறுவனம் முழுமையாக ஆதரவாக நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
பொலிட்டிகோ நிறுவனமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “இந்த வெள்ளை மாளிகை மற்றும் எதிர்கால வெள்ளை மாளிகைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து நடுநிலையோடு செய்தி வெளியிடுவோம்.
எங்களது முதலாவது அரசியலமைப்புத் திருத்த உரிமைகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாங்கள் உறுதியாகப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளது.




