திருமலையில் சோகம் – 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆமணக்கு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தரம் 06இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த விதைகளை சூரியகாந்தி விதைகள் என நினைத்து தனது வகுப்பு நண்பர்களுக்கு கொடுத்துள்ளார்.
அவற்றை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 20 ஆண் மாணவர்களும், 2 பெண் மாணவர்களும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 5 மாணவர்கள், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, அந்த மாணவர் வழக்கமாக சூரியகாந்தி விதைகளை பாடசாலை கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் இம்முறை, ஆமணக்கு விதைகள் சூரியகாந்தி விதைகளுடன் கலந்திருந்ததை அறியாமல், அவற்றையும் சேர்த்து கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





