” வடக்கு, கிழக்கு எல்லைகளை காத்த காவலர்களே மலையக மக்கள்”
“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ மலையக மக்களை நாம் தேசிய இனமாக அங்கீகரித்துள்ளோம். மலையக மக்களின் உரிமைக்காக எமது கட்சி எல்லா விதத்திலும் குரல் கொடுத்து வந்துள்ளது.
மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் எல்லை கிராமங்களில் காவல் அரண்களாக மலையக தமிழர்களே வாழ்ந்துவருகின்றனர். மலையக மக்கள் அங்கு வந்திருக்காவிட்டால் அது மாற்று இனத்தவரின் கைகளுக்குள் சென்றிருக்கும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களைவிடவும் மலையக பகுதிகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
லயன் வாழ்க்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது ஒழிக்கப்பட வேண்டும். அம்மக்களுக்கு காணி உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.” எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.





