வீழ்த்த நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் கற்பித்த ஈரான் மக்கள்
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு என்பது வெறும் தேசிய அளவிலான விடைபெறல் மட்டுமல்ல, தெஹ்ரானில் திரண்டிருந்த அந்த மக்கள் பெருங்கடல், இஸ்லாமியக் குடியரசை வீழ்த்த நினைத்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் விடுக்கப்பட்ட ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய போரினால் ஈரான் பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அது சவால்களுக்கு அடிபணியாத, ஒன்றுபட்ட, தங்களின் அடுத்தகட்ட நகர்வை தாங்களே தீர்மானிக்கும் உறுதியான நாடாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த சவாலான போக்கும், உயிர்வாழும் திறனுமே தற்போது அதன் பேச்சுவார்த்தை உத்தியை வழிநடத்துவதாக பிராந்திய அதிகாரிகள், தூதர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இறுதிச்சடங்கு நிகழ்வையே, தங்களின் சகிப்புத்தன்மையை ஒரு பலமாக (Leverage) மாற்றுவதற்கான தருணமாக தெஹ்ரான் பயன்படுத்திக் கொண்டது.
ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய கேந்திர மையமாக விளங்கும் ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மீது தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை இந்தப் போர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரான் கருதுகிறது.
எனவே, தங்களின் அணுசக்தி திட்டம் தொடர்பான எந்தவொரு உடன்பாடும், இந்த முக்கிய நீரிணை மீதான ஈரானின் இறையாண்மையை ஏற்றுக்கொள்வதில் இருந்தே தொடங்க வேண்டும் என அது நிபந்தனை விதிக்கிறது.
அணு ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்காக, வாஷிங்டனால் 60 நாள் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இது இப்போது ஒரு புதிய போட்டிக்கு வழிவகுத்துள்ளது.
இந்தப்போட்டியில், ஈரானின் வசம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விட, அதன் புவியியல் இருப்பிடமே மிக சக்திவாய்ந்த சொத்தாக மாறியுள்ளது. போர்க்கால நன்மைகளை நிரந்தர மூலோபாய நன்மைகளாக மாற்ற ஈரான் முயல்கிறது.




