சுரேஷ் சலேவின் தகவல்கள் ‘புலி டயஸ்போராக்களிடம்’ சிக்கலாம்: பதறுகிறது மஹிந்த அணி
“சுரேஷ் சலேவிடம் உள்ள உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காகப் புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.
எனவே, தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“மிலேனியம் சிட்டி (Millennium City) சம்பவம் நினைவிருக்கலாம் அல்லவா? அதுதொடர்பான தகவல்கள் வெளியான பின்னர், வடக்கிலிருந்து இராணுவத்திற்குத் தகவல் வழங்கியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்; அதனுடன் தொடர்புடைய படையினரும் கொல்லப்பட்டனர்.
எனவே, சுரேஷ் சலேவிடம் உள்ள தகவல்களை நீதிமன்ற உத்தரவைப் பெற்று மட்டுமே பெற வேண்டும். ஏனெனில், நீதிமன்ற உத்தரவை எவராலும் மீற முடியாது.
சுரேஷ் சலே என்பவர் பயங்கரவாதி அல்ல. பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஓர் அதிகாரி ஆவார். எனவே, அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தக்கூடாது.
சுரேஷ் சலேவின் மடிக்கணினி (Laptop) மற்றும் தொலைபேசியில் உள்ள தகவல்களை ஏதேனும் ஒரு பொலிஸ் அதிகாரி பகிரங்கப்படுத்தினால், அது நாட்டிற்கே ஆபத்தாக முடியும்.
சில வேளைகளில், பணத்திற்காக அந்தத் தகவல்களைப் புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இல்லாமலில்லை.
இதன் காரணமாகவே, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, பொறுப்பு வாய்ந்த ஓர் அதிகாரியிடம் அதனை ஒப்படைக்க வேண்டும் என்கிறோம். அவ்வாறு முறையாக நடந்தால், அனைத்துத் தகவல்களையும் சுரேஷ் சலே வெளிப்படுத்துவார் என நம்புகின்றோம்” என்றார் சாகர காரியவசம்.




