கிடைத்துள்ள வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- லாரா டிபெல்லா
கொழும்பின் கடல்சார் மற்றும் தளவாட மையத்தை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்பை இலங்கை அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் தலைவர் லாரா டிபெல்லா வலியுறுத்தியுள்ளார்
8 வது கொழும்பு அனைத்துலக கடல்சார் மற்றும் தளவாட மாநாட்டில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க சரக்குகளுக்கான ஒரு முக்கிய இடைமாற்று மையமாக கொழும்பின் மூலோபாய முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது.
விரைவான விரிவாக்கத்திற்கான தற்போதைய வாய்ப்பு காலவரையின்றி நீடிக்காது. இது கொழும்பு எதையாவது சாதிக்க வேண்டிய நேரம். இந்தத் தற்காலிக வாய்ப்பு நீடிக்காது.
கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் அமெரிக்க சரக்குகளின் அளவு மற்றும் மேலும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக, கொழும்பில் ஏற்படும் முன்னேற்றங்களில் கூட்டாட்சி கடல்சார் ஆணையம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இங்கு அதிக வளர்ச்சிக்கான ஒரு பகுதியை நாங்கள் காண்கிறோம். எனவே, அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக கூட்டாட்சி கடல்சார் ஆணையம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தற்போது, சுமார் 30 பில்லியன் டொலர் மதிப்பிலான, அமெரிக்கா தொடர்பான சுமார் 500,000 கொள்கலன் சரக்குகள் கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்கின்றன.
குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார இடையூறுகள் இருந்தபோதிலும், நாடு தனது கடல்சார் பங்கைத் தக்கவைத்து விரிவுபடுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு, கொழும்பு மற்றும் இலங்கையின் வளர்ச்சி சாத்தியம் “மிகப்பெரியது”.




