அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு
சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதற்கு இலங்கை , அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் (S. Paul Kapur) இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வழங்கிய உதவிகள் உட்பட, தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக அமைச்சர் ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கும் அவர் நன்றி கூறினார்.
“நாட்டில் பாதுகாப்பான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வணிக நிறுவனங்கள் இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டும்.” என அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஆதரவையும் வசதிகளையும் வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்குப் பதிலளித்த கபூர், அமெரிக்கா இலங்கையுடனான தனது உறவை பெரிதும் மதிப்பதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.




