Tamil News

அட்டராசக்க…. இந்திப் படத்தில் ரஜினி…? தயாரிப்பாளரின் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியின் பிரபல தயாரிப்பாளர் கம் இயக்குநர் சரித் நடியட்வாலா ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ரஜினியின் 171 வது படமான இது, ஏப்ரல் மாதத்திற்கு மேல் தொடங்க உள்ளது.

இந்தப் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் ரஜினி நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் இந்தியின் முன்னணி தயாரிப்பாளரான சஜித் நடியட்வாலா, ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது இந்திப் படமா, யார் இயக்கும் படம், எப்போது அப்படம் தொடங்கும் என்ற செய்திகள் அதில் இல்லை.

சஜித் நடியட்வாலா சல்மான் கான் உள்ளிட்ட இந்தியின் சூப்பர் ஸ்டார்களை வைத்து தொடர்ந்து படம் தயாரித்து வருகிறவர். இந்தியின் பிரபல ஹவுஸ்ஃபுல் பட சீரிஸும் இவரது தயாரிப்பே. அந்த சீரிஸின் 5 வது பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இவர் சல்மான் கான் நடித்த கிக் படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

சமீபத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சஜித் நடியட்வாலாவை பலமுறை சந்தித்தார். சல்மான் கானை வைத்து, ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை சர்வதேச அளவில் பண்ண வேண்டும் என்று அந்த சந்திப்பின் போது முடிவு செய்து, அது குறித்து சல்மான் கானிடமும் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கானுக்கும் அவர்களது ஐடியா பிடித்துள்ளது. முருகதாஸ் – சல்மான் கான் இணையும் படத்தில் ரஜினியும் நடிக்கக்கூடும் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.

எப்படியிருப்பினும், ரஜினி – சஜித் நடியட்வாலா இணையும் படம் பிரமாண்டமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Exit mobile version