குருந்தூர் மலைக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்க தீர்மானம்
முல்லைத்தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்பை கொண்டுவர புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அங்கு பொலிஸ் இருப்பை மீண்டும் ஏற்படுத்தக் கோரி, அக்கோயிலின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
குருந்தூர் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்ததுடன், தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பணியையும் அவர்கள் மேற்கொண்டு வந்ததனர்.
இவ்வாறான பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து மீளழைத்தமையால் தொல்பொருட்கள், தொல்பொருள் காப்பகம் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதி என்பன கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன .
அதேநேரம் பல்வேறு குழுக்கள் போராட்டங்களுக்காக வருகை தந்தபோதிலும்,அவற்றைத் தடுப்பதற்கான சிவில் பாதுகாப்பு அதிகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே உள்ளது.
எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து மீளழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் சேவைக்கு அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்திற்கு அமைய பாதுகாப்பு பணிக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்ப புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.




