வாட்டி வதைக்கிறது வெப்ப அலை – பிரான்சில் நிலைமை மோசம்
ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை (Heat wave) தாக்கி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளைப் பதிவு செய்துள்ளது.
இதன் காரணமாக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மற்றும் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் ஆகியவற்றின் பார்வையாளர் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தக் கடுமையான வெப்பநிலை பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதை அடுத்து, அங்குள்ள வானிலை ஆய்வு மையங்கள், பிரான்ஸைப் போலவே கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பைக் கருதி ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளன.
பிரான்ஸ் முழுவதும் உள்ள 30 வானிலை நிலையங்களின் சராசரி வெப்பநிலையைக் கணக்கிடும் தேசிய வெப்பக் குறியீடு 29.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிக உயர்ந்த சராசரி வெப்பநிலை இதுவாகும். இந்த வளிமண்டல நிலைமை குறைந்தது வார இறுதி வரை நீடிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 2003 ஆகஸ்ட் மற்றும் 2019 ஜூலை ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலையின் போது பதிவான 29.4 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையே பிரான்சின் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.
வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும், பாதுகாப்பு இல்லாத நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்திருந்தும் இந்த அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
பரவலான குளிரூட்டி (Air conditioning) வசதிகள் இல்லாத பிரான்சில், இந்த வெப்ப அலை பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் விளையாட்டு நிகழ்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் வழக்கமாக நள்ளிரவு வரை திறந்திருக்கும் நிலையில், தற்போது மதியமே மூடப்படுகிறது.
அதேபோல் லூவ்ரே அருங்காட்சியகமும் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை வழக்கமான நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




