22 இற்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இன்று (03) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பிற்பகல் 2:00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நாம் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சிக்கவில்லை. 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவே எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.
ஆளுங்கட்சியிடம் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், பொதுமக்கள் இச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர். எனவே, 22 ஆவது திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாம் போராடுகின்றோம். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழித்துத் தனிக்கட்சி ஆட்சியை நோக்கிப் பயணிப்பதற்கே தேசிய மக்கள் சக்தி முற்படுகின்றது” என்றார்.




