சீனாவிற்காக உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை நோட்டமிட்ட பொலிஸ் அதிகாரி கைது!
சீனாவிற்காக உளவு பார்த்த இருவரை பிரித்தானிய நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.
சீன-பிரிட்டிஷ் இரட்டைக் குடியுரிமை பெற்ற பீட்டர் வாய் (38) மற்றும் பில் யுவன் (65) ஆகிய இருவரும், ஓல்ட் பெய்லியில் இன்று நடந்த விசாரணையைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஹொங்காங் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை நோட்டமிட்டதற்காகவும், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டதற்காகவும் பீட்டர் வாய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மறுவிசாரணை இன்றி தொடர்புடைய வழக்கு தண்டனைக்காக திகதியிடப்பட்டுள்ளது. அதுவரை அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாய், எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்ததாகவும், முன்னர் அரச கடற்படையில் இருந்தவர் என்றும், தற்போது லண்டன் நகர காவல்துறையின் சிறப்பு காவலராக உள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டது.




