இமயமலை பேரனர்த்தம்: 93,000 பேர் பாதிப்பு
இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதேவேளை, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நிவாரணப் பணி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
“குறைந்தது 93,000 மக்கள் பாதிக்கப்பட்டு, பெரும் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்” என நேபாளத்திற்கான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் தலைவர் David Fisher ஜெனிவா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மண்சரிவால் உருவாகிய ஏரியின் கரை உடைந்ததைத் தொடர்ந்து, நிவாரணப் பொருட்களுடன் சென்ற அமைப்பின் லாரிகள் செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளதாகவும், இதனால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிஷர் கூறினார்.
அதேவேளை, மேலும் தொடர்ச்சியான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் தலைவர் கமல் கிஷோர் எச்சரித்துள்ளார்.
“ஒரு வகையில், இந்தப் பேரழிவு இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அது இன்னும் பல்வேறு வழிகளில் நீடித்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.




