என்.பி.பி. அரசை இயக்கும் மறைமுக கரம் எது? புதிய சர்ச்சையைக் கிளப்பும் எதிரணி!
“மக்கள் ஆணைமூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று நாட்டில் இருக்கும்போது, அதற்கு மேலான சக்தியொன்றே தீர்மானம் எடுக்கின்றது என நாம் சுட்டிக்காட்டிவந்தோம். இது உண்மை என்பதை ரில்வின் சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா யாழில் வைத்து வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு,
“ உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதில்லை என்ற விமர்சனத்தையே ஆட்சியாளர்கள்மீது எதிரணியில் இருக்கும்போது ஜே.வி.பி. உள்ளடங்களான தேசிய மக்கள் சக்தியினர் பிரதானமாக முன்வைத்தனர்.
ஆனால் இன்று ஆட்சிக்குவந்த பின்னர் தேர்தலை நடத்த முடியாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.
அவர் இந்த அரசாங்கத்தில் வகிக்கும் பதவி என்ன? நிதி அமைச்சரா, மாகாண சபைகள் அமைச்சரா? இல்லை. அவர் அரசாங்கத்தில் எவ்வித பதவியும் வகிக்கவில்லை. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் அல்லர். எனவே, எப்படி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் கதைக்க முடியும்?
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இருந்தாலும் பெலவத்தை ஊடாகவே ஆட்சி நடத்தப்படுகின்றது என நாம் சுட்டிக்காட்டி இருந்தோம். அது உண்மை என்பதை ரில்வின் சில்வாவின் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்கு ஜே.வி.பி. செயலாளர் செல்கின்றார். எனவே, நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே தேசிய மக்கள் சக்தி என்ற விம்பம் உருவாக்கப்பட்டது என்பதும் இதன்மூலம் புலப்படுகின்றது.” – என்றார் முஜிபூர் ரஹ்மான்.




