புதிய அரசமைப்பு: பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி
“ புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று, இறுதி கட்டத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ அரசமைப்பு மறுசீரமைப்பைவிட, புதிய அரசமைப்புக்கு செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.
புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்குரிய பேச்சுகள் இடம்பெற்றன.
நடவடிக்கை இடம்பெறுகின்றது. எனினும், அந்த விடயத்துக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம்.
ஏனெனில் நாட்டில் பொருளாதாரம்,
அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்புக்கே தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை முடிந்துவிட்டது. அமைச்சரவைக்கு யோசனை வரும்.
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமை நீக்கம், புதிய அரசமைப்புடன் தொடர்புபட்ட விடயமாகும்.
மக்கள் அனுமதியுடன் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. இந்த காலப்பகுதி போதுமானது. அதற்கு பிறகும் மக்கள் எமக்கே ஆணை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார் பிரதமர்.




