ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு
அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
மேற்படி விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி, முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படுவதாகவும் அமைச்சர் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணையின்போது சுரேஷ் சலே, கடுமையான முறையில் நடத்தப்பட்டார் மற்றும் அவமதிக்கப்பட்டார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, இந்த குற்றச்சாட்டை அமைச்சர் நிராகரித்தார்.
” தடுப்பு உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கொண்டு வரப்படும் எந்தவொரு நபரும் ஒரு சாதாரண சந்தேகநபரைப் போலவே நடத்தப்படுகிறார்.
சுரேஷ் சலேவுக்கு எதிராக எந்தவொரு தனித்துவமான அல்லது வழக்கத்திற்கு மாறான முறைகளும் கையாளப்படவில்லை.
யாருக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்குவதோ அல்லது யாரையும் பிரத்தியேகமாக அவமதிப்பதோ எங்களது கொள்கையல்ல. நிலையான வழிகாட்டு நடைமுறைகளே (Standard Operating Protocols) பின்பற்றப்படுகின்றன” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
மேலும், சுரேஷ் சலேயின் குடும்பத்தினருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ இந்தத் தடுத்து வைப்புத் தொடர்பாக ஏதேனும் நியாயமான கவலைகள் இருப்பின் இந்த வழக்கைக் கண்காணிக்கும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அந்த விடயங்களை சமர்ப்பிக்க உரிமை உண்டு என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




