சிறைச்சாலையைக்கூட நிர்வகிக்க முடியவில்லை: அரசுமீது எதிரணி விமர்சனக் கணை தொடுப்பு
“சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கூட முறையாக நிர்வகிக்க முடியாத தேசிய மக்கள் சக்தியினரால் இந்நாட்டை முறையாக ஆள முடியுமா? அவர்களால் நிச்சயமாக முடியாது. அதனால்தான் அவர்கள் ஏதேச்சாதிகார வழியில் பயணிக்க முற்படுகின்றனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாகச் சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:
“மஹர சிறைச்சாலையிலும் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளைக் கூட இந்த ஆட்சியாளர்களால் முறையாக நிர்வகிக்க முடியவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
சிறைச்சாலைக் கட்டமைப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல், அங்கு நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத இந்த ஆட்சியாளர்கள், எவ்வாறு நாட்டை ஆள்வார்கள்? நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்குவார்கள்?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைச்சருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தோம். ஆனால், அதனை ஆளுங்கட்சியினர் வாக்களித்துத் தோற்கடித்தனர். அதுமட்டுமல்லாமல், எங்களைப் பரிகாசமும் செய்தனர்.
தற்போது நீதி அமைச்சர் எங்கே இருக்கிறார்? அவரைப் பாதுகாத்த ஆளுங்கட்சியினரால் இனி மக்கள் முன் தலைகாட்ட முடியுமா?”– என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.




