ஆங்கிலக் கால்வாயை கடக்க புதிய யுக்தியை கையாளும் புலம்பெயர்ந்தோர் – மூவர் பலி
பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகத்திற்கு அருகே அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்றைய தினம் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீரான வானிலை காரணமாக நேற்றைய தினம் சுமார் 700 பேர் ஆங்கிலக் கால்வாயை கடந்திருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கின்றனர்.
புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகளில் ஏறுவதை பிரெஞ்சு காவல்துறையினர் கண்காணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது, ஆனால் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், படகுகள் தண்ணீரில் இறங்கியவுடன் தலையிட அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடத்தல்காரர்கள் கடற்கரைகளில் இருந்து படகுகளை இறக்குவதற்குப் பதிலாக, கடலுக்கு அப்பால் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பெரிய ‘டாக்சி-போட்’களைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான படகில் பயணித்த மூன்று பேரே மேற்படி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




