ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர்: ட்ரம்ப் தகவல்
சவுதி அரேபியாவின் மிகமுக்கியமான எண்ணெய் விநியோகக் குழாய் மீதான தாக்குதலுக்கு ஈரான்தான் காரணமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “அநேகமாக அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.
டப்ளினில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் “எங்களைத் தொடர்புகொண்டனர். அவர்கள் எங்களுடன் போரிட விரும்பவில்லை; அதை எங்களிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டார்கள்” எனவும் டிரம்ப் கூறினார்.
“நாங்கள் இதில் ஈடுபடுவதை அவர்கள் நிச்சயமாக விரும்பவில்லை. அத்துடன் பெரும்பாலான கப்பல்களை அவர்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கின்றனர்.
ஒரே ஒரு நாட்டைக் குறித்து மட்டும் அவர்கள் திருப்தியடையாமல் உள்ளனர்; அதையும் நாங்கள் விரைவில் சரிசெய்து விடுவோம்,” என ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது நல்ல நண்பர் என்று குறிப்பிட்ட டிரம்ப், “அனைத்து விவகாரங்களும் விரைவில் சுமுகமாக முடிவடையும்” என்று உறுதியளித்தார்.




