வடக்கு, கிழக்கில் காணி மீட்பு சமர்: யாழில் விசேட கலந்துரையாடல்
இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
உயர் பாதுகாப்பு வலயம், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகத் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், “ஒன்றுபட்ட அமைப்பு” என்ற பொதுவான அமைப்பின் ஊடாகக் கைகோர்த்துச் செயற்படும் நோக்கில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புத் தேவைகள், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் ஆக்கிரமிப்புகள் காரணமாக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பறிபோயுள்ளன என்றும், போருக்குப் பின் பல ஆண்டுகள் கடந்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் பிரதிநிதிகள் வேதனை தெரிவித்தனர்.
“ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், கடந்த கால அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆட்சிக்கு வந்த புதிய அரசும் காணி விவகாரத்தில் அதே பழைய அணுகுமுறையையே பின்பற்றுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
காணிப் பிரச்சினையைத் தனித்தனி மாவட்டங்களின் பிரச்சினையாகப் பாராமல், வடக்கு – கிழக்கு தழுவிய மக்கள் உரிமைப் பிரச்சினையாக அணுகி, அரசுடன் பேச்சு நடத்துதல், சட்ட நடவடிக்கை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதல் போன்ற ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




