சமூக ஊடகப் பயன்பாடு: சட்டத்தை மேலும் கடுமையாக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம், சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வயதுக் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்குரிய கடுமையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்நிலையிலேயே தற்போதைய சட்டங்கள் போதுமான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்ற கவலைகளுக்கு மத்தியில், 16 வயதிற்குட்பட்டோரைத் தடுக்கத் தவறும் நிறுவனங்களுக்கு சுமார் 50 மில்லியன் டொலர்களைவரை வரை அபராதம் விதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த கடுமையான வழிமுறைகளை உருவாக்கப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முன்னுரிமை அளித்து வருகிறார்.
தற்போதைய கட்டுப்பாடுகள் ஒரு மெல்லிய கட்டமைப்பாக மட்டுமே இருப்பதாகக் கூறும் பாதுகாப்பு அதிகாரிகள், கூடுதல் அதிகாரங்கள் தேவை என வலியுறுத்துகின்றனர்.




