ஈரான் ட்ரோன்களை அழிக்க UAE இற்கு ‘Iron Beam’ வழங்கியது இஸ்ரேல்!
ஈரானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்ரேல் புதிதாக உருவாக்கிய ‘அயர்ன் பீம்’ ‘Iron Beam என்ற ஆயுதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆயுதத்தில் உள்ள லேசர் கற்றைகள், ஈரான் ட்ரோன்களை நடுவானிலேயே சாம்பலாக்கிவிடும் வல்லமை கொண்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல ‘ஸ்பெக்ட் ரா’ என்ற கண்காணிப்பு கருவியையும் அமீரகத்துக்கு இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இது ஈரானின் ட்ரோன்கள் 20 கி.மீ தூரத்துக்கு அப்பால் வரும்போதே எச்சரிக்கை விடுக்கும். இதன் மூலம் அயர்ன் பீம் ஆயுதங்களை பயன்படுத்தி ட்ரோன்களை அழித்துவிடலாம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பிற இடங்களை குறிவைத்து ஈரான் 500 ஏவுகணைகள், 2,000 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தின.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேல் ஏற்கெனவே அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஆயுதங்களையும், அவற்றை செயல்படுத்த ராணுவத்தினரையும் இஸ்ரேல் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்படி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.





