மாலைதீவு வங்கியின் கிளையை இலங்கையில் திறப்பது குறித்து ஆராய்வு!
மாலைத்தீவு வங்கியின் (Bank of Maldives) கிளையொன்றை இலங்கையில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தரமான மாலைத்தீவு மீன்பிடி உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விரிவான முன்முயற்சிகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம் – என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” எதிர்காலத்தை நோக்கி, வர்த்தக மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கும், முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை திறப்பதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.
நாளை நடைபெறவுள்ள மாலத்தீவு-இலங்கை வணிக ஒன்றியம் இரு நாடுகளின் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தாக்குநர்களை இணைக்கும் முக்கிய மேடையாக அமையும்.
மாலைத்தீவு வங்கியின் (Bank of Maldives) கிளையொன்றை இலங்கையில் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தரமான மாலைத்தீவு மீன்பிடி உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விரிவான முன்முயற்சிகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம்.
அத்துடன், நமது பொருளாதார உறவை மேலும் சமமான, நியாயமான மற்றும் பரஸ்பர நலனுக்கு உகந்ததாக உறுதிப்படுத்தி, தற்போதுள்ள வர்த்தக சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் நான் வலியுறுத்தினேன்.
கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு நமது தேசிய முன்னுரிமைகளில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பதால், உயர்கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி, எதிர்காலத் தொழில்களுக்கான திறன் மேம்பாடு, நிறுவன கூட்டுறவு மற்றும் அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு நாம் உடன்பட்டோம்.
நமது இலக்கு தெளிவானது: வேகமாக மாறிவரும் உலகில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான திறன்களுடன் நமது இளைய தலைமுறையை தயார்படுத்த வேண்டும்.
தீவு நாடுகளாக நமது எதிர்காலம் இந்தியப் பெருங்கடல் மூலம் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது.
நிலையான மீன்பிடி முகாமைத்துவம், கடல் வளங்களைப் பாதுகாப்பது மற்றும் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற பொதுவான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிசெய்தோம்.
கூட்டு பயிற்சிகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் இலங்கை வழங்கும் தொடர்ச்சியான ஆதரவை மாலைத்தீவு மிகவும் மதிக்கிறது. கொள்கை மற்றும் பொருளாதாரத்திற்கு அப்பால், நமது உறவு மக்கள், கலாச்சாரம் மற்றும் பொதுவான மரபுரிமை என்பவற்றில் வேரூன்றியுள்ளது.
கலாச்சார பரிமாற்றம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு முன்முயற்சிகள் மூலம் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு நாம் உடன்பட்டோம். இந்த உறவுகள் நமது அசைக்கமுடியாத நட்பின் அடித்தளமாக தொடர்ந்து நிலைத்திருக்கும்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்தும் நாம் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம், அது இரு நாடுகளின் இருப்புக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறது.
எனவே வலுவான சர்வதேச ஆலோசனை, கூட்டிணைந்த சுற்றுச்சூழல் முன்முயற்சிகள் மற்றும் காலநிலை தாக்குப்பிடிக்கும் திறனுக்குரிய கூட்டு நடவடிக்கைகளுக்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்.” என்றார் மாலைதீவு ஜனாதிபதி.





