செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச நிபுணத்துவம் அவசியம்
” யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார்.
இலங்கையின் சமீபத்திய அரசியல் நிலவரங்கள், மனித உரிமை முன்னேற்றங்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் செம்மணியில், இதுவரை 380 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்று சாணக்கியன் எம்.பி., அதிகாரிகளுக்கு விளக்கினார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
இவ்வளவு பெரிய அளவிலான அடையாளப் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதற்கு இலங்கையிடம் தற்போது போதிய தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச தரத்துக்கு ஏற்ப, நம்பகமான விசாரணையை உறுதி செய்ய அரசு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியும் தற்போதைய அரசிடம் தென்படவில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.




