கேபியிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து தீவிர விசாரணை!
புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலின் முன்னாள் தலைவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன், பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் பெருந்தொகை தங்கம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முக்கிய பிரதானிகள் சிலர் விசாரணைக்கு வரவழைக்கப்படவுள்ளன.
சிங்கள இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளையும் விசாரணைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றுள்ளது என தெரியவருகின்றது.
எனினும், குறித்த தங்கம் கண்டெடுக்கப்பட்ட காலப்பகுதியில் தான் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றியதால், இதுகுறித்த விபரங்கள் தனக்குத் தெரியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கேபி வசம் இந்தத் தங்கத் தொகை இருந்துள்ளதுடன், அவர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அந்தத் தங்கம் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்தபோதே காணாமல்போயுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





