இம்ரான் கான் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவ சிகிச்சைக்காக அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன, மேலும் இஸ்லாமாபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளும் வைத்தியசாலையில் குழுமியுள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர் ஃபைசல் மற்றும் டாக்டர் உஸ்மா ஆகியோரும் அடியாலா சிறைக்கு வந்தடைந்தனர். மருத்துவமனைக்கு கான் மாற்றப்படும்போது, இந்த இரண்டு மருத்துவர்களும் அவருடன் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கானின் சகோதரி அலீமா கானும் அடியாலா சிறையின் 5 ஆம் எண் நுழைவாயிலுக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறைவாசத்தின் போது கானின் உடல்நிலை குறித்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி மாத இறுதியில், அவர் தனது வலது கண்ணில் சுமார் 85% பார்வையை இழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர், இருப்பினும் அரசாங்கம் இந்தக் கூற்றை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




