பொருளாதார நெருக்கடி- பாதுகாப்பு அச்சம்: ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நகர்கிறதா ஐஸ்லாந்து?
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவது குறித்தான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதா , இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக, ஆர்க்டிக் பிராந்தியத்தின் சிறிய தீவு நாடான ஐஸ்லாந்து மக்கள் சனிக்கிழமை வாக்களித்து வருகின்றனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவு, அந்நாட்டைத் தாண்டி பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியில் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கொள்கையைக் கொண்ட அரசாங்கத்தின் கீழ், 13 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றிய இணைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியது.
கூட்டமைப்பிற்கு வெளியே இயங்குவதே நாட்டிற்கு நல்லது என அப்போது கருதப்பட்டது.ஆனால், அதன்பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர், அண்டை நாடான கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் ஆகியவை காரணமாக ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.
அத்துடன், நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதோடு, ஐஸ்லாந்தின் நாணயத்தின் மதிப்பிலும் தொடர்ச்சியான நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமருமான கிறிஸ்ட்ரன் Kristrun Frostadottir , மக்கள் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் ‘ஆம்’ (Yes) என வாக்களித்தால், ஐஸ்லாந்து தனது உறுப்பினர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வகுக்க பிரஸ்ஸல்ஸுடன் (EU தலைமையகம்) பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி வரும்.
அதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் முறைப்படி இணைவதா , இல்லையா என்பதைத் தீர்மானிக்க இரண்டாவது தடவையாக மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
“ஒருவேளை ‘ஆம்’ என்ற முடிவு கிடைத்தால், நாடு தனது தலையை நிமிர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சிறந்த உடன்பாட்டைப் பெற ஒன்றிணைந்து செயல்படும்” என்று பிரதமர் புரோஸ்டாடோட்டிர் தெரிவித்துள்ளார்.
மாறாக, ‘இல்லை’ (No) என்ற முடிவு கிடைத்தால், “ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய அனைத்து ஊகங்களும் கைவிடப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




